Sunday, April 30, 2017

உழைப்பாளி.., உயர்வாய்.., நீ..,

 


மக்கு உருக் கொடுத்து..,
கருவறைக்குள் வைத்து காவல் காத்த..,
தாயும் தந்தையுமா.., தெய்வங்கள்..,??

உதிரத்தை வியர்வையாய் விதைத்து..,
கருவறை உயிர்க்கும் உணவளித்த..,
உலகழந்த உழைப்பாளிகளும் தெய்வங்கள்..,

கடவுள் எனும் உழைப்பாளி..,
கருவறையில் செதுக்கிய உயர்வே நீ..,

மனிதனெனும் உழைப்பாளி..,
நிலவறையில் செதுக்கிய உணவை..,
ஓராயிரம் கைகளில் தவழ வைத்தாய் நீ..,

வியர்வையை பதியமிட்டு..,
நீ ஊன்றி விட்ட விதை மொட்டு..,
வீறு நடைப் போட்டு..,

என்னை விதைத்த கடவுள் எங்கே எனக் கேட்டு..,
உழைப்பாளி உன் பாதம் தொட்டு..,
வணங்கும் நாள் வரும் பாராட்டு..,

கணிணியும்.., கட்டுத் தறியும்..,
உன் விரல் மெட்டுக்களில் இசை பாடட்டும்.,

மனிதனின் மகத்துவம்..,மண்ணின் தனித்துவம்
விரைவிலே உழைப்பில் உயர்வாகட்டும்..,

உழைக்கும் வர்க்கங்கள் இருக்கும் வரை..,
உலகம் இருக்கும்..,

உலகப் பந்து இருக்கும் நாள் வரை..,
உழைப்பும் உயிர்க்கும்..,

உழைப்பின் வலிமை புரியும் போது..,
உயிர்கள் உருகும் ஓசை கேட்கும்..,

உழைப்பாளி..,
எங்கள் உயிர்ப் பை நீ..,

விதைப்பாய்..,
எல்லோர் மனங்களிலும்..,உயர்வாய் நீ..,
  

            உமா நாராயண் (குமரி உத்ரா)







Tuesday, April 25, 2017

"உலகில் முதல் தோன்றிய மொழி தமிழே" ..,!!

"வீறுடைசெம்மொழித் தமிழ்மொழி உலகம்
வேரூன்றிய நாள்முதல் உயிர்மொழி..!!"





    என்று தமிழின் பெருமையைப் பறைசாற்றுவார் பாவலரேறு பெருஞ்சித்திரனார்.!!   தமிழ் மூவாயிரம் ஆண்டுகளுக்குமேல் பழைமை வாய்ந்த இலக்கிய வளம் மிக்க மொழி. காலத்தால் மூத்த தமிழ்மொழி,


    தனித்தன்மையால் மிடுக்குற்றுச் செம்மொழியாய்த் திகழ்கிறது., திருந்திய பண்பும், சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூய்மை மொழி தமிழ் செம்மொழியாம். தொன்மை, முன்மை, நுண்மை, திண்மை, எண்மை, ஒண்மை, இனிமை, தனிமை, இளமை,வளமை, தாய்மை, மும்மை, இயன்மை, செம்மை, வியன்மை என வரும் பதினாறு செவ்வியல் தன்மைகளைக்கொண்டு செம்மொழி, அதுவே நம் மொழியாகும்..!!





     தமிழ்மொழியின் முதல் தோற்றம் கி.மு. 50,000 .., மூவகைச் சுட்டொலிகளிலிருந்து சொற்கள் தோன்றியதே  தமிழ் மொழியின் முதல் தோற்றமாகும். தமிழ் தோன்றிய இடம் குமரிக்கண்டம் அல்லது குமரிமாந்தனின் இலமுரியாக்கண்டம்.  தமிழனின் பிறப்பிடமும் தமிழ் மொழியின் பிறப்பிடமும் குமரிக்கண்டம் தான்..,!!


      உலகில் ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளன. இன்றும் நிலைத்து நிற்கும் மொழிகளில் தமிழ் மொழியும்  ஒன்று. ஒரு மொழி நிலைத்து நிற்பதற்கு அதன் பழைமையும்,வளமையும் மட்டும் போதாது. அம்மொழி பேச்சு மொழியாகவோ.., அல்லது எழுத்து மொழியாகவோ.., ஆட்சி மொழியாகவோ..,பயிற்றுமொழியாகவோ,  இருக்க வேண்டும்.!!


     தமிழ் மொழி்க்கு இவை அனைத்தும் பொருந்தும். உலகம் தோன்றியபோதே தோன்றிய தமிழை, தன் தொன்மையை கருதி.., “”என்றுமுள தென்தமிழ்..,”” என்கிறார் கம்பர்.!!





    தமிழ் மொழியானது திராவிட மொழிகளான, கன்னடம், தெலுங்கு மலையாளம், துளுவம் முதலிய மொழிகளுக்கு தாய் மொழியாக திகழ்கிறது.!! 
   
       காலச்சூழலே மொழிக் கலப்பினை ஏற்படுத்துகிறது. பிற மொழிச் சொற்களை நீக்கினால் பல மொழிகள் இயங்காது. ஆனால்., தமிழ் ஒன்றே, பிற மொழிச் சொற்களை நீக்கினாலும்..,எளிதில் இயங்க வல்லது. மிகுதியான  வோ்சொற்களை கொண்டது தமிழ். அவ்வேர்சொற்களைக் கொண்டே புத்தம் புது கலைச்சொற்களை தமிழ் மொழியால் உருவாக்கி கொள்ள இயலும். 5000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான மொழி நம் தமிழ் மொழியாகும். இன்று வரை உயிர்ப்புடன் இருக்கும் பழைய மொழிகளில் தமிழ் முன்னணியில் உள்ளது.


    உலகில் பேசப்படும் மொழிகளில் தமிழின் பழமையோ..,அதன் பெருமையோ.., எம் மொழியும் நெருங்க இயலாது. தமிழ் மொழி இறவா இலக்கிய, இலக்கண வளங்கொண்டு தனக்கென தனி நோக்கும், போக்கும் கொண்டுள்ளது. இவையாவும், தமிழ் மொழியின் தனித் தன்மைகளே..,!!


     மாக்சுமுல்லர் என்னும் மொழி நூலறிஞரோ தமிழே மிகவும் பண் பட்ட மொழியென்றும் அது தனக்கே உரிய இலக்கிய செல்வங்களைப் பெற்றிருக்கும் மொழியென்றும் பாராட்டியுள்ளார்.உலக இலக்கியங்கள் எவற்றிற்கும் இல்லாத தனிச்சிறப்பு, சங்க இலக்கியங்களுக்கு உண்டு.!!


    தமிழ் மொழியின் இலக்கண அமைப்பானது தனிச் சிறப்புடையது. நுண்ணிய அறிவை உண்டாக்க வல்லது. தொல் காப்பியரின் ஆசிரியராகிய அகத்தியர் எழுத்து, சொல், பொருள்,யாப்பு, அணி ஆகிய ஐந்து இலக்கணங்களையும் எழுதினார்..., 




     அந்நூலுக்கு அகத்தியம் என்பது பெயர். இத்தகைய இலக்கண நூல்கள் தோன்ற வேண்டுமானால் குறைந்தது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாவது தமிழ் மொழி தோன்றிச் செம்மைநிலை பெற்றிருத்தல் வேண்டும். அத்தகைய இலக்கிய இலக்கண வளமுடையது தமிழ்மொழி.!!
  
    எக்காலத்திற்கும் பொருந்தும், மொழியியல் கோட்பாடுகளை வகுத்தது தமிழ் மொழி. நம் தமிழ் மொழியிலுள்ள சொற்கள்..,  மனித உணர்வுகள்.., அனைத்தையும் எண்ணியவாறு வெளிப்படுத்த போதுமானது என்பார் மொழி நூலார்..!

    தமிழ் மொழி காலப் புதுமையை பெறத்தக்க வல்லது. கணிணி பயன் பாட்டிற்கும் ஏற்றது. செம்மொழிக்கான பதினோரு கோட்பாடுகளும்.., முற்றிலும் பொருந்துமாறு அமைந்த ஒரே மொழி நம் தமிழ் மொழியாகும்..,!!




      தமிழ் இந்திய மொழிகளில்,மிக நீண்ட இலக்கிய, இலக்கண மரபுகளை கொண்டது தமிழ். கண்டெடுக்க பட்டுள்ள தமிழ் ஆக்கங்கள் கி.மு. 300 ஆண்டுகளுக்கு, முன்பு உள்ள பிராமி எழுத்துக்களில் எழுத பெற்றவைகளாகும்..!!

     இந்தியாவில் கிடைத்துள்ள 100,000  கல்வெட்டு தொல்லெழுத்துப் பதிவுகளில் 55,000 க்கும் அதிகமாக தமிழில் உள்ளன.தமிழ் நூல்களை எளிய நடையில் எழுதலாம். இலக்கண நூல்களை புதிதாக படைத்திடலாம். இதில் ஏறத்தாழ 95 விழுக்காடு தமிழில் உள்ளன; மற்ற மொழிகள் அனைத்தும் ஐந்து விழுக்காட்டுக்கும் குறைவான கல்வெட்டுகளையே கொண்டுள்ளன.,!

     பனையோலைகளில் எழுதப்பட்டு (திரும்பத் திரும்பப் படியெடுப்பதன் (பிரதி பண்ணுவது) மூலம்) அல்லது வாய்மொழி மூலம் வழி வழியாகப் பாதுகாக்கப்பட்டு வந்ததால், மிகப் பழைய ஆக்கங்களின் காலங்களைக் கணிப்பது மிகவும் கடினமாக உள்ளது. எனினும் மொழியியல் உட்சான்றுகள், மிகப் பழைய ஆக்கங்கள் கி.மு. 4 ஆம் நூற்றாண்டுக்கும் கி. பி. 3 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இயற்றப்பட்டிருக்கலாம் எனக் காட்டுகின்றன.!!

        தமிழ் பிராமி எழுத்துமுறை அசோகரின் பிராமி-யிலிருந்து தோன்றியது என்று சிலவருடம் முன்பு வரை எண்ணப்பட்டு வந்தது. ஆயினும் சில ஆண்டுகளுக்கு முன் கிடைத்திருக்கும் கொடுமணல் அகழாய்வில் கிடைத்த பானைக்கீறல்கள் மற்றும் தேனியில் கிடைத்த கி.மு. 4 , அல்லது ம் நூற்றாண்டின் நடுக்கற்கள் இவற்றிலிருந்து அசோகர் காலத்துக்கு முந்தைய காலத்திலேயே தமிழ்- பிராமி எழுத்து முறை வழக்கில் இருந்தது என்று கருதப்படுகிறது..,!





      கிபி 11-ஆம் நூற்றாண்டில் முதலாம் இராஜ ராஜ  சோழன் தஞ்சை பெரியக் கோவிலை கட்டுவித்தான். இக்கோவில் 1003-1004 ஆம் ஆண்டு தொடங்கி 1010ம் ஆண்டு முடிக்கப்பட்டது. அப்போது உள்ள கல் வெட்டுக்களிலும் தமிழ் எழுத்துக்கள்  மிகையாக பொறிக்கப் பட்டுள்ளன.!!
     
      சிந்து சமவெளியில் இருந்த மொழி குறித்துப் பலர் பல தியரிகளை
முன்  வைத்துள்ளனர். அங்கு இருந்த மொழி ஆரிய மொழி என்று சிலரும், திராவிட மொழி எனச்சிலரும் கூறிவருகின்றனர். ஆனால் பொதுவாக அங்கு இருந்த மொழி ஒரு திராவிட மொழியாகத்தான் இருக்கும்.

      என்ற கருத்தாக்கத்திற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன.  சிந்து சமவெளியின் மொழி ஒரு "திராவிட" மொழியாக மட்டுமே இருக்க முடியும் என்ற கருத்து வலுப்பெறுகிறது. திராவிடமொழி என்னும் பொழுது அது "தமிழின் மூல வடிவம்" என்பதைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும் ?

     தமிழ், திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மொழியாகும். இக்குடும்பத்தில், இருளா, கைக்காடி, பெட்டக்குறும்பா, சோலகாயெருகுலா   என்னும் மொழிகள் அடங்குவது  தமிழ் மொழிக் குடும்பமாகும்.

    அகர வரிசையான ஆத்திச்சூடி 1,000 ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றப்பட்டது. திருக்குறள்  ஏறத்தாழ 2,000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டது.!!





      எந்த ஒரு கண்டுபிடிப்பும் புதிய கண்டுபிடிப்புகள் மூலம் மறுக்கப்படுவது வழக்கமானது தான். ஆனால் இதற்கு மாற்றாக ஒரு ஆதாரப்பூர்வமான வாதமோ, கண்டுபிடிப்போ முன்வைக்கப்படும் வரை தமிழர்கள் எல்லோரும் பெருமை கொள்ளலாம்..,!!

     மொழியின் செழுமைக்கும், பல ஆயிரம் ஆண்டுகள் கடந்து வாழ்ந்து கொண்டிருக்கும் நம் அன்னை மொழியின் வளமைக்கும் இவை    விஞ்ஞானப்பூர்வமான சான்றுகள் ஆகும்.


    தன்னிகரில்லாத நம் தமிழ்மொழி குறித்து நாமும் பெருமைக் கொள்வோம்.!!  தமிழ்., முதல் மொழி.., மூத்த மொழி.., தமிழ் நமது அடையாளம்..,!!!  என வெற்றி முரசுக் கொட்டுவோம்..,!!!


               உமா நாராயண் (குமரி உத்ரா)


Tuesday, April 11, 2017

மூட நம்பிக்கைகள்..,!!! கட்டுரை - 2

றிவில்லாதவா்களை, மூடர்கள் என்கிறோம். தேவையற்ற பழக்க வழக்கங்களை மூட நம்பிக்கைகள் என சொல்கிறோம்.!

      மூட நம்பிக்கைகள் பல வருடங்களாக., மக்களால் பின்பற்ற பட்டு வருகிறது. பல்லி கத்தினால்., பூனை குறுக்கே ஓடினால்..,

    என பல தரப்பட்ட முரணான விஷயங்களுக்கு  உயிர் கொடுத்து..,மூட நம்பிக்கையாய் வைத்துள்ளார்கள்.

                    இன்னும் சில பேர் பெண் குழந்தைகளுக்கு எருக்கம்பால் கொடுப்பதும்..,குழந்தைகளை நரபலி கொடுப்பதும்.., என அரக்கத்தனமான மூடநம்பிக்கைகளை பின் பற்றி வருகிறார்கள். இப்படிப் பட்ட மூட பழக்கங்களை நாம் தான் பலி கொடுக்க வேண்டும்.அவர்களுக்கு தக்க தண்டனையும் வழங்க வேண்டும்..,!!!

     கழுதைகளுக்கு..,  திருமணம் பண்ணி வைத்தால் மழை வரும். என்ற நம்பிக்கை இன்றும் சில இடங்களில் நடந்து வருகிறது.!

       மொத்தத்தில் நம் முன்னோர்கள்.., சொன்ன பல விஷயங்களை.., நாம் மூடநம்பிக்கைகள் என நினைத்துக் கொள்கிறோம். நல்ல நம்பிக்கைகள் தான் எனத் தெரியாமல்...,,,

     அந்தக் காலங்களில்., புளிய மரங்களில்.., அரச மரங்களில் பேய் இருக்கும். அந்த மரங்களின் கீழே, படுக்க கூடாது. என்பார்கள்.! ஆனால் உண்மை என்னவென்றால் இரவு நேரங்களில்..,அரச மரங்கள், புளிய மரங்கள்.., அதிக அளவு கார்பண்டை ஆக்ஸைடை வெளியேற்றும்.

   இரவில் அம்மரங்களின் கீழே படுப்பவர்களுக்கு அது நோயை உண்டாக்கும். அது ஆபத்தாய் முடியும். என்பதைத் தான் நம்மவர்கள் தவறாக புரிந்து கொண்டார்கள்.!

      காக்கைகள் கரைந்தால்.., வீட்டிற்கு விருந்தினர்கள் வருவார்கள் என்ற நம்பிக்கையும் முன்பு இருந்தது. அந்தக் காலங்களில், கப்பலை ஓட்டுபவர்கள் காக்கைகளை பிடித்து வைத்திருப்பார்கள். தாங்கள் வரும் பயணங்களில்..,கரைகளை  அவர்கள் தவற விட்டு விட்டால்.., அந்த காகங்களை எடுத்து பறக்க விடுவர். காகங்கள் கரையை நோக்கி பறக்கும். உடனே அதை பின் தொடர்ந்து.., மாலுமிகள் கப்பலை செலுத்துவர், கரைகளை நோக்கி...,

  காகங்கள் ஊரில் வந்து கத்த தொடங்கியதும்.., கரையில் இருப்பவர்கள்.., யாரோ விருந்தாளிகள் வருகிறார்கள் என முடிவு செய்வார்கள்.!!

       மிருகங்கள் கத்தினால் ஊருக்கு ஏதோ ஆபத்து வரப்போகிறது என சொல்வார்கள் பெரியவர்கள்..,உண்மையில் மிருகங்கள் கத்தினால்..,பெரிய விபரீதங்கள் நடக்க போகிறது என அர்த்தம். நில நடுக்கங்கள், சுனாமி போன்ற பேராபத்துக்கள் வருவது மிருகங்களுக்கு முன் கூட்டியே தெரிய வரும். எனவே தான் அவைகள் ஒலி எழுப்பும்.!!

    பூனை குறுக்கே வந்தால்.., அது ஆபத்து என்பார்கள்.  முந்தைய காலங்களில் ராஜாக்கள் போருக்கு செல்லும் போது..,செல்லும் வழிகளில் பூனை குறுக்கே வந்தால்..,அந்த இடத்தில் மக்களின் குடியிருப்புகள் இருப்பதாக நினைத்து தன் படைகளை வேறு வழியாக வழி நடத்தி செல்வார்கள். ராஜாக்கள்.!!

 ஆனால் நம்மவர்கள் அதையும் தவறாக புரிந்து கொண்டார்கள்.!

      நம்பிக்கைகளில் நல்லதும் இருக்கிறது. தீயதும் இருக்கிறது.., நாம் தான் நம் வாழ்க்கைக்கு தேவையான நல்ல விஷயங்களை  எடுத்துக் கொள்ள வேண்டும்.! தீயவைகளை தவிர்க்க வேண்டும்...,!!!


                           உமா நாராயண், (குமரி உத்ரா) 

Monday, April 3, 2017

முகங்கள்..,!!!

  






பூமிப்பந்தின் மேலே.,
உலவும் உற்சாக முகங்கள்.,
ஊஞ்சலாய் தாலாட்டும் முகங்கள்..,!!


முக.., வரிகளை மறக்க முடியாமல்..,
முகவரி தேடிச் சென்று..,
முறுவலிக்கும் வெள்ளை முகங்கள்..,!!


பொய் முகங்கள்..,போலி முகங்கள்..,
போகின்ற வழி தோறும்..,
நெருடும் சில பொருந்தாத முகங்கள்..,!!


களவு முகங்கள்..,கருப்பு முகங்கள்..,
கசடு முகங்கள்..,இருளுக்குள்ளே..,
இடறும் வௌவால் முகங்கள்..,
இனியும் காண விரும்பாத சகதி முகங்கள்..,!!


வழியெல்லாம் முட்கள் போல.,
பல முகங்கள் முகவரி தந்தாலும்..,
வாசமிகு ரோஜாவைப் போல்.,
நல் முகங்களை நலம் காணுங்கள்..,!!


எத்தனை.., எத்தனை முகங்கள் பார்த்தாலும்..,
கர்ப்பத்தின் கைக்குள்ளே ..,
நாம் இருந்த போதே..,
இதழோரம் சிரிப்போடு ..,!!


இறைவன் தேர்ந்தெடுத்த..,
இரு முகங்கள்..,
தாய், தந்தை எனும் அன்பு முகங்கள்..,
போலி கலக்காத பொக்கிச முகங்கள்..,!!!


இல்லாளுடன் இணக்கமாகி..,
புதிதாய் ஒரு முகம் காண..,
பூரிப்புடன் காத்திருக்க..,!!


பூத்த புது மலர்கள் போல..,
மகன், மகளாய்..,
பாச முகங்கள்..,
நமக்காகவே இறைவன் அளித்த..,
வரப் பிரசாதங்கள்..,!!!


           உமா நாராயணன், (குமரி உத்ரா)




Thursday, March 30, 2017

சூரியப் பெண்ணே .., !! தமிழ்த் தேரின் பாதச்சுவடுகளில் பயணித்த கேள்வி..,பதில்கள்..,

   
    
                                        

        மார்ச் 8,  உலக மகளிர் தினம் ,உலக அரங்கில் பெண்கள் சந்திக்கும் பல தடைகளை தாண்டி., சாதிக்கும் வல்லமையை போற்றி கொண்டாடும் தினம்.

      அப்படிப்பட்டதொரு.., சிறப்பான மகளிர் தின மாதத்தில், வானலை வளர் தமிழ் - தமிழ் தேர் கண்ட புதுமைப்பெண்.., உமா நாராயணுடன் அளவளாவி அவர் கடந்து வந்த  பாதை.., அவரை ஒரு சிறந்த படைப்பாளி ஆக்கிய விதம் பற்றி,அறிந்து.., இங்ஙனம்   பதிய வைக்க உதவிய  தமிழ் தேருக்கு உளமார்ந்த நன்றிகள்..,!!

எட்டும் அறிவினில் ஆணுக்கி்ங்கே பெண்
இளைப்பில்லை காணென்று கும்மியடி..,
என்று புதுமைப் பெண்ணுக்கு சிவப்பு கம்பளம் விரித்த..,
மகாகவியின் அன்றைய பாடலின்,காட்சியை இன்று நம் முன் சாட்சியாக நின்று காட்டும், இவர், குமரி உத்ரா..,!!

    பொதுவாக பெண்களை பொறுமை காக்கும் பூமித்தாயாக, குளிர் நிலவாக., ஒப்பிடுகையில், இவரோ.., “சூரியப் பெண்ணே” என பெண்ணுக்கு ஆற்றலைக் கூட்டி ஆதாரமாக காட்டியுள்ள விதம்.., இவரிடம் பல கேள்விகளை கேட்க தூண்டுகிறது.

    அவ்வண்ணம், கேட்கப்பட்ட கேள்விகளும் பதில்களும் தங்களின் பார்வைக்கு இதோ...,

     1, நிலவு மகளை..,சூரிய பெண்ணாக.. நினைக்க தூண்டியது..,??

      பெண்கள்.., சாதனைகள்.. மற்றும் சரித்திரம் படைக்கும் நாயகிகளாக மாறும் போது.,அங்கே அவர்கள் உள்ளத்தால், சூரியனை விட பிரகாசமாய் ஜொலிக்கிறார்கள். பெண்களை  நிலவாக.., மலராக..,நினைத்த காலங்கள் போய்விட்டது. எனவே, அந்த பெயர் பொருத்தமாக இருக்கும்.., என நினைத்தேன். இதுவரை யாரும் தேர்வு செய்யாத பெயராகவும் இருக்க வேண்டும். என்பது என் எண்ணமாக இருந்தது. இருளை விலக்க சூரியன் எழுவது போல.., ஒவ்வொரு வீட்டிலும் பெண்கள் சூரியப் பெண்களாய் திகழ வேண்டும்!.

       2, ங்களுடைய, இந்த இயல்பான அழகான, கற்பனை வளத்திற்கும் ஆர்வத்திற்கும் ஆதாரமாக, பெற்றோரின் வழிகாட்டுதல் படிப்பினை என முன்னூட்டங்கள் உண்டா..,?  
   
       இயற்கையிலேயே என் தந்தைக்கு தமிழின் மேல் அபரிதமான பற்று உண்டு. கற்பனை வளம், கலையார்வம்.,கொண்டவர்கள்..அதனால் எனக்கும் அந்த பாக்கியம் கிடைத்திருக்கலாம். சிறு கவிதைகள் நான் படைத்த போதே , வானொலி நிலையம் என்னை கை நீட்டி அழைத்த போது.., பெண் குழந்தைகளை வெளியே படிக்கவே அனுப்பாத என் தந்தை வானொலிக்கு அழைத்து சென்றது.., முதல் தொடக்கம்..! எனது படைப்புகளின் முதல் வாசகர்களும் எனது பெற்றோர் தான். படிக்க சொல்லி கேட்டு, அதன் பிறகே அனுப்ப சொல்வார்கள். தவறிருந்தால் தந்தை திருத்த சொல்வார்கள்..!!

    3, ள்ளி பருவத்தில் தமிழ் ஆர்வம் பற்றி..,??

    தமிழ் ஆர்வம் உண்டு. மற்ற பாடங்களை விட, தமிழுக்கு முன்னுரிமை கொடுப்பேன். பள்ளிக் காலங்களில் பாட்டு போட்டிகளில் முதல் இடத்தில் இருப்பேன். பரிசுகள் வென்ற அனுபவம் உண்டு.! தமிழ் ஆர்வத்தால் ஏழாம் வகுப்பிலேயே.., திருநெல்வேலி வானொலி நிலையம் சென்று பாடிய அனுபவம் உண்டு . பல கவியரங்கத்திற்கும் சென்றுள்ளேன்..,!!

       4, வானொலி நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்து, பாராட்டி விமர்சித்துள்ளீா்கள்.முதல், முதலாக என்ன எழுதினீர்கள்.அதை வானொலி நிலையத்தார் குறிப்பிட்ட போது எப்படி உணர்ந்தீர்கள்..,??

          1990 ம் வருடம்,, முதல் கவிதை, எய்ட்ஸ் விழிப்புணர்வுக்காக.., வானொலி நிலையம் எழுத சொல்லி நான் எழுதிய எய்ட்ஸ் கவிதை..,! “மாற்றான் தோட்டத்து மல்லிகை வாசம்..,! மனம் அங்கே கொண்டது சகவாசம்..,! பூக்களின் பாசத்தால் நான் பெற்றேன் பரவசம்..,! நாளாக நாளாக தேய்ந்தது சுவாசம்..,! இப்போது நாற்க்கட்டிலில் என் வாசம்..,! என் உயிர் இப்போது எமன் வசம்..,!! இதை வானொலி நிலையத்தார் வாசிக்கும் போது நான் பெற்றேன் பரவசம்..,! அதுவே, என் எழுத்துலகின் முதல் வாசம்..,!!

     5, விதை, சிறுகதை இதில் உமா ஜொலிப்பது எதில்.,? இது     எனக்கானது என தேர்வு செய்வது எதை..,??
 
          எத்தனையோ கவிதைகள் பல இதழ்களிலும், வானொலிகளிலும்,  ஸ்ரீலங்கா, நாகர்கோவில், அமீரகத்தில் இரண்டு வானொலியில் வெளி வந்தும், நான் ஜொலித்தது சிறுகதைகளில் தான்.! நல்ல தரமான கருத்துக்களை வலியுறுத்திய சிறுகதைகள் தான் எனது வெற்றி.!

      சிறுகதை.., படித்து விட்டு போனவர்களின்  மனதில் ஒரு தாக்கத்தை..,கொண்டு வர வேண்டும். எனது புத்தகத்தின் முதல் கதை..,சூரிய பெண்ணே.., நாவலாக எழுத நினைத்து தொடங்கிய கதை..,! இன்றைய அவசர உலகில்..,நாவல் படிக்க நேரமில்லாத நிலை..! சிறுகதைகள் சொல்ல வேண்டிய விசயத்தை சீக்கிரமாக கொண்டு போய் சேர்க்கும். என நான் தேர்வு செய்த களம் இது.! சிறுகதைகள் தான் என் தனி அடையாளம்..,!!

 6, பொதுவாக பெண்களுக்கு பல திறமைகள் இருந்தும், அவை வளர குடும்ப சூழல் இடம் தரவில்லையென்று ஆதங்கபடுவதுண்டு. உங்களின் அனுபவம்..,? சாத்தியக் கூறுகள்..,??

     உண்டு. எனக்கும் அந்த நிலை...,திருமணத்திற்கு பிறகு புகுந்த வீட்டில் வந்ததுண்டு. தொடர்ந்து எழுத முடியாத சூழ்நிலை இருந்தது. பிரசவகாலத்தில் தாய்வீட்டிற்கு வந்த போது தான் நிறைய எழுத முடிந்தது. பெண்கள் எழுதுவதை வெறும் நேர போக்காக நினைத்தவர்கள் உண்டு புத்தகங்கள், படிப்பது.., எழுதுவது, வேலை இல்லாதவர்கள் செய்யும் வேலையாக பார்க்கப் பட்ட நேரம்..அது.! அதையும் மீறி எழுதிய அனுபவம் உண்டு.
  
      7,  பெண்ணின் மனதின் வழியாக சமுதாயத்தை பார்க்கிறீர்களா..,? சமுதாய பார்வையில், பெண்ணின் நிலைமையை பார்க்கிறீா்களா..,??

        ஒரு பெண் என்பதால் பெண்களின் மனநிலையில் சமுதாயத்தை பார்க்கிறேன். பெண்களுக்கு இழைக்கப்படும் நிறைய விஷயங்கள் என்னை பாதித்தது. அதனால் நிறைய எழுத முடிந்தது.! அவர்களுக்கு., அடிப்படைக்கு  தேவையான கல்வி மறுக்கப்பட்டது, பெண்குழந்தை என்றால் வெறுப்பு காட்டுவது..,  அவர்களின் வாழ்க்கை பிரச்சினைகள்.., என்னுடைய கதைகளில் ஆழமாக பதிவு செய்துள்ளேன். பெண்கள் உலகின் புண்ணிய  விதைகள்..  அவர்களை.., விருட்சமாக்காமல் ஏன் வீதிகளில் வீசி எறிகிறார்கள்..,??

8,  முதல் புத்தகமான சூரிய பெண்ணே, உங்களை பெண்ணினத்திற்கு ஒரு முன் மாதிரியாகக் காட்டுகிறது. உங்களின் இலக்கிய பணியில், அடுத்த படைப்பு பற்றி..,??

     சூரியப் பெண்ணே, எனக்கு ஒரு தனி அடையாளத்தை தந்துள்ளது.! அதுவும் தமிழ்த்தேரின் வழியாக என்னை உலகுக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. 89.4 FM  ராம்விக்டா் அவர்கள் ஒரு நாள்..,ஏன் நீங்கள் புத்தகம் வெளியிட கூடாது..? என்ற கேள்வி சிந்திக்க வைத்தது.! அதற்கு பெரும் உதவியாக இருந்த காவிரி மைந்தன் சாருக்கும்,என் கணவருக்கும் நன்றியும் பெருமையும்.., 

     என் கதைகளை படிக்கும் பெண்கள் வீரம் தன்னம்பிக்கை கொண்டவர்களாக....திகழ வேண்டும்..,!எனது அடுத்த படைப்பு சுதந்திர போராட்ட தியாகியான எனது தந்தையின் சுய சரிதையாக இருக்கும். “பொக்கிச மனிதர் என் தந்தை"  எனது அடுத்த புத்தகம்.! அடுத்து எனது கவிதை தொகுப்பை வெளியிட வேண்டும்.,!! 

9, ங்களால் மறக்க முடியாத தகவல்கள்., .அல்லது நீங்கள் பகிர்ந்து கொள்ள விரும்பும் கருத்துக்கள் ஏதாவது..,?

     சூரியப் பெண்ணே எழுதிய குமரி உத்ரா, பெரிய படிப்பு   படித்தவளாகவோ, அல்லது பலபேரின் தூண்டுதலிலோ வெளி உலகுக்கு வரவில்லை.!
   ஒரு கட்டுப்பாடான குடும்பமான ஒரு பெரிய குடும்பத்தில்.., பிறந்து, பள்ளி வாழ்க்கைக்கு பிறகு,படிப்பு மறுக்கப்பட்டு.., பெண்கள் சத்தமாக சிரிக்க கூட., அனுமதி இல்லாத வீட்டில் இருந்தவள்.!!

     அவ்வீட்டில், இருந்து கொண்டு.., சத்தமில்லாமல் எழுதி.. (ஸ்ரீ லங்கா,நாகா்கோயில்)  வானொலிகளில்..,
சத்தமாக  வாசிக்கப்பட்டு..,பத்திரிகைகளில் முக.,வரியை (போட்டோ) மறைத்து..,எழுதிய சிறுகதைகளால் கடிதங்கள் என் முகவரி தேடி வந்து என் கதவுகளை தட்டிய அந்த நாட்கள் என் வாழ்வில் மறக்க முடியாது..!!

    அதனால் பெருமை கொண்டு என் தந்தை..,என்னை வானொலிக்கும்.,  கவி அரங்கங்களுக்கும் அழைத்துச் சென்றார்கள் .பக்கத்து கிராமம் கூட தெரியாத நான்.., எனது எழுத்துக்களால் வெளி உலகை தரிசிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.!! குமரி உத்ரா எனும் பெயரும் நிலைத்தது..,!! என் எழுத்து பயணம் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது..,!! இன்னும் தொடரும். நன்றி..,


                    உமா நாராயண், (குமரி உத்ரா)



சித்திரையே வருக.,!!

சித்திரையே.., ஏன் விசித்திரமாய் பார்க்கிறாய்..?? 2020 என்று., இறுமாப்புடன் நிமிர்ந்த போது.., உலகமெங்கும் 🌏 கிடைத...