மாதவனுக்கு மலைப்பாக இருந்தது எதிர் வீட்டையே
பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் போலிருந்தது அவனுக்கு. இப்படி ஒரு அழகு தேவதையா….? இந்த அழகு தேவதையா பெற்றெடுத்தவர்கள் பெரும்
தவம் செய்திருக்க வேண்டும் என்ன ஒரு அழகு? அவள் கண்களும் வெல்வெட் பாதங்களுக்கு வலிக்குமோ..?
அவள் தன்னைப் பார்க்க மாட்டாளா என்ற
ஏக்கம் வந்தது மாதவனுக்கு!
மாதவனின் எதிர்வீட்டில் புதிதாக யாரோ குடி வந்திருந்தார்கள் அவர்களின்
செல்ல மகளுடன். மாதவனுக்கு இந்த ஒரு வாரமாக கண்கள் அவனை அறியாமலேயே எதிர்வீட்டை
சுற்றிவந்தது.
அவள்
வந்தும் ஒரு மாதம் ஓடி விட்டது. அம்மாவிடம் கேட்டு பெயர் கூட, பிரியங்கா என்று அறிந்திருந்தான்.
பிரியங்கா
இப்போதெல்லாம் இவனை அடிக்கடி பார்க்கிறாள் சில நேரங்களில், பார்த்தும் பார்க்காதது மாதிரி…. அப்போதொல்லாம் இவன் நெஞ்சம் வேகமாக அடித்துகொள்ளும்.
மாதவன், அலுவலகம் விட்டு வந்ததும் அம்மாவின்
பேச்சையே உற்று கேட்பான் ஏனெனில் அவள் அப்பாவிடம் பேசும் பேச்சு பெரும்பாலும் பிரியங்காவைப்
பற்றி தான் இருக்கும்.
பிரியங்கா
இவனைப் பார்க்கும் போதெல்லாம் மெல்ல சிரிக்கிறாள், அவளின் தெற்றுப்பல் தெரிய,
அவள் சிரிக்கும் சிரிப்பு.
மாதவனுக்கு அவளை கைகளில் அள்ளி,
அப்படியே
முத்தமிட வேண்டும் போலிருக்கும்; பிரியங்கா இவன்
பார்வையை உணர்ந்ததும் உள்ளே ஓடி விடுகிறாள்.
என்றாவது ஒரு நாள் அவளை அப்படியே
தூக்கி இரு கன்னங்களில் முத்தமிட வேண்டும் தன் ஆசை நிறைவேறுமா..?
பிரியங்காவின் அம்மாவும், அப்பாவும் இவன் வீட்டிற்கு வரும்
அளவுக்குப் பழகி இருந்தார்கள் ஆனால், பிரியங்கா
மட்டும் இவன் வீட்டில் இல்லாத போது வந்ததாக அம்மா சொன்னாள்.
அந்த ஞாயிற்றுகிழமை மொட்டை மாடியில் நின்றிருந்த மாதவன், பிரியங்கா அவள் அம்மாவுடன் இவன் வீட்டை நோக்கி வருவதை கண்டதும்
சந்தோச துள்ளலோடு மாடியிலிருந்து கீழே வந்தான்.
பிரியங்கா அம்மாவின் பின்னே இவனைப் பார்த்துச் சிரித்தபடி நின்றாள். அவள் அம்மாதான் சொன்னாள்.
“வர்ற பதினாலாம் தியதி பிரியங்காவோட
பிறந்தநாள் அதுக்கு நீங்க எல்லோரும் வரணும்” அவள் சொல்ல..
மாதவன் மெல்ல,” பிரியாகுட்டி, உனக்கு இந்த அங்கிளோட அட்வான்ஸ் பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் “
ஐந்து வயது மழலை பிரியங்காவை தூக்கி ஆசையோடு
அவள் கன்னங்களில் முத்தமிட்டான் மாதவன்.
உமா நாராயண், (குமரி உத்ரா)
அருமை...
ReplyDeleteமிக்க நன்றி...
Deleteஅருமை...
ReplyDelete